உலு சிலாங்கூர், ஆக 15- பாத்தாங் காலி- கெந்திங் சாலையின் 2வது கிலோ மீட்டரில் நேற்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த கார்-மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.
பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த முகமது ஷாரிப் அப்பாண்டி (வயது 31) என்ற அந்த போலீஸ்காரர் உடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கெந்திங் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பி.எம்.டபள்யு. காரை மோதியதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அர்ஷாம் கமாருடின் கூறினார்.
முகமது ஷாரிப்பின் உடல் சவப்பரிசோதனைக்காக கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இவ்விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
இந்த விபத்தில் 63 வயதுடைய பி.எம்.டபள்யூ, ரகக்காரின் ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி உயிர்த் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.