கிரீக், செப் 28- வடகிழக்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளை உள்ளடக்கிய 186 பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது. அத்தகைய ஆபத்து மிகுந்த இடங்களில் 52 சபாவிலும் 24 கெடாவிலும் உள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார். கனிமவள மற்றும் புவி அறிவியல் துறை, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) உள்ளிட்ட துறைகள் முன்னெச்சரிக்கை முறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு சம்பந்தப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதிலும் முனைப்பு காட்டி வருவதாக அவர் சொன்னார். மீட்புப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்படுவதற்கு ஏதுவாக "நகர்வைக் கண்டறியும்" முறை மற்றும் "எச்சரிக்கை முறை"யை நிறுவும் பணியில் அத்துறைகள் ஈடுபட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நேற்று, தாசேக் பண்டிங் படகுத் துறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான தீயணைப்புத் துறையின் பயிற்சியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் பகுதிகள் மீது தமது துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால் கெடாவின் குனோங் ஜெராய் அடிவாரத்தில் உள்ள தித்தி ஹயூனில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் அவர் சொன்னார்.