பெட்டாலிங் ஜெயா, செப் 28- இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த ஜாலான் எஸ்எஸ்1/11 மற்றும் ஜாலான் எஸ்எஸ்9ஏ/17 ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் மேம்படுத்தும் திட்டங்கள் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியுள்ளன.
அண்மைய சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் மழையின் போது கால்வாய் நிரம்பி வழிந்தோடவில்லை என்பது கண்டறியப்பட்டதாக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறிறார். கடந்த ஏப்ரலில் முற்றுப்பெற்ற ஜாலான் எஸ்எஸ்1/11 வெள்ளத் தணிப்புத் திட்டம் 2020 முதல் இந்தப் பகுதியில் நிலவிவந்த வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வைத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஜாலான் SS9A/17 இல் வடிகால் மேம்படுத்தும் பணி மழைகாலத்தில் கால்வாய்கள் நிரம்பி வழிவதைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது என்றார் அவர். இன்று இங்கு ஜாலான் SS9A/17 பகுதியில் வடிகால் மேம்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2020 ஜூலை 22 ஆம் தேதியன்று ஒரு மணி நேரம் நீடித்த புயல் மற்றும் கனமழையைத் தொடர்ந்து அவ்விரு பகுதிகளிலும் முதல் முறையாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே, முன்பு மழையின் போது கிட்டத்தட்ட ஆறு அங்குல உயரத்திற்கு நீர் வீட்டில் புகுந்து தாங்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கிய தாக குடியிருப்பாளரான பவானி பெரியசாமி (வயது 40) கூறினார்.
எனினும், வெள்ளத் தடுப்புத் திட்டம் முற்றுப் பெற்றது முதல் இப்போது தனது வீட்டில் வெள்ளம் ஏற்படுவதில்லை இல்லை என்று அவர் குறிப்பிட்டார். முன்பு, கனமழை பெய்தால், குறிப்பாக இரவில் என்னால் தூங்க முடியாது. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று பயப்படுவேன். ஆனால் இப்போது கால்வாயில் தண்ணீர் நிரம்பி வழிவதில்லை. ஆகவே, வீட்டிற்குள் நீர் வருவதற்கான சாத்தியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.