ஷா ஆலம், செப் 28- வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர் கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15,972 உறுப்பினர்களை மாநில அரசின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தயார் நிலையில் வைத்துள்ளது.
கடுமையான வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதனைக் கையாளும் பணியில் ஒவ்வோரு உறுப்பினரும் ஈடுபடுவர் என்று மாநில அரசு அலுவலகத்தின் சேவை நிர்வாகப் பிரிவு செயலாளர் முகமது ஷா ஓஸ்மின் கூறினார்.
இவ்வாண்டில் நாம் முன்கூட்டியே தயார் நிலையில் உள்ளதோடு உறுப்பினர்களையும் தயார்படுத்தியுள்ளோம். மாநில நிலையில் மட்டுமல்லாது கிராமத் தலைவர், மக்கள் பிரதிநிதி ஆகியோரை உட்படுத்தி மாவட்ட நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
வெள்ள மேலாண்மை என்பது அரசு நிறுவனங்கள் நிலையில் மட்டும் அமல்படுத்துவது அல்ல. மாறாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பேரிடரை கையாளும் பொறுப்பு உள்ளது என்றார் அவர்.
வெள்ளம் ஏற்படும் போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் 164 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படகுகள் தவிர்த்து லோரிகள், நான்கு சக்கர இயக்க வாகனங்கள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் சொன்னார்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறும் வெள்ளப் பேரிடர் மாதிரி பயிற்சியில் சமூக நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஊராட்சி மன்றங்கள் உட்பட 67 அரசு துறைகளைச் சேர்ந்த 343 பேர் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.