அம்பாங், அக் 16- பண்டான் இண்டாவில் இன்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. இந்த விற்பனையின் போது இரண்டே மணி நேரத்தில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.
அம்பாங் நகராண்மைக் கழக திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோழி, முட்டை, இறைச்சி, அரிசி உள்ளிட்ட பொருள்கள் சந்தையை விட குறைவான விலையிலும் குறுகிய நேரத்திலும் விற்கப்பட்டன.
இந்த விற்பனையில் கலந்து கொண்ட மக்கள் இத்திட்டம் குறித்து மனநிறைவு தெரிவித்ததோடு இந்த விற்பனை நடவடிக்கை தொடரப்பட வேண்டும் என வலியறுத்தியதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
பண்டான் இண்டா தொகுதியில் நடத்தப்படும் 14வது மலிவு விற்பனை இதுவாகும். இங்கு விற்கப்படும் பொருள்களின் விலை சந்தையைவிட குறைவாக உள்ளதோடு தங்களின் பொருளாதார சுமையையும் குறைக்க உதவுவதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் பொருள்களை வாங்க வருவோருக்கும் உதவும் பொருட்டு 400 மீகூன் பொட்டலங்களும் சார்டினும் இலவசமாக வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனையும் மேலும் சில பொருள்களைச் சேர்க்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் நடத்தப்படும் விற்பனைகளில் கோழியின் எண்ணிக்கையை கடந்த வாரம் முதல் நாங்கள் உயர்த்தி விட்டோம். இதுதவிர மாவு உள்ளிட்ட பொருள்களை இந்த விற்பனையில் சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்