உலு சிலாங்கூர் டிச 5- இங்கு நேற்று நடைபெற்ற உலு சிலாங்கூர்
மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின்
போது பண்டார் சுங்கை புவாயா நிலத் திட்ட பங்கேற்பாளர்கள் 50 பேர்
மந்திரி பெசாரிடமிருந்து நிலப்பட்டாவைப் பெற்றுக் கொண்டனர்.
அந்த நிலக் குடியேற்றத் திட்ட பங்கேற்பாளர்கள் 3,000 பேருக்கும் 5ஏ
பாரங்களை வழங்கும் பணி வரும் மார்ச் மாதம் வரை கட்டங் கட்டமாக
மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதற்கு முன்னர் இத்திட்ட பங்கேற்பாளர்கள் 200 பேருக்கு நிலப்பட்டா
வழங்கினோம். அவர்கள் 24 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் மாநில
அரசு இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வினைக் கண்டுள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதால் நில
உரிமையாளர்களுக்கு கட்டங் கட்டமாக பட்டாக்கள் வழங்கப்படும் என்றார்
அவர்.
முன்பு பெல்டா குடியேற்றப் பகுதியாக இருந்த பண்டார் சுங்கை
புவாயாவின் நில அந்தஸ்து கடந்த 1995 ஆம் ஆண்டில் ரத்து
செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிலத்தை மேம்படுத்துவது தொடர்பில் நில உரிமையாளர்கள்
முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த ரத்து நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. எனினும் நிலத்தை மேம்படுத்துவதற்கு
நியமிக்கப்பட்ட குத்தகையாளர் பொருளாதார மந்த நிலை காரணமாக
பணியை மேற்கொள்வதில் தோல்வி கண்டார்.