ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூர் அரசின் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இம்மாதம் 18ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் இதுவரை அதற்கு 23 விண்ணப்பங்கள் கிடைக்கப் பட்டுள்ளன.
இவர்களில் 10 பேர் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி பெயர்கள் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார். விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
விண்ணப்பங்களைச் சரிபார்த்து அவற்றை இறுதி செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் தணிக்கை செய்யப்பட்டு இறுதி மதிப்பீட்டிற்காக காணொளியாக பதிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 2023 சிலாங்கூர் வேளாண் விழாவில் சிலாங்கூர் வேளாண் சாதனையாளர் அறிவிக்கப்படுவார் என்ற அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூரை உணவு விநியோக மையமாகவும் அத்தொழில் துறையில் மேலும் அதிகமானோர் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கிலும் மூன்றாம் ஆண்டாக இந்த வேளாண் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக இஷா கடந்தாண்டு டிசம்பர் 13ஆம் தேதி அறிவித்திருந்தார்.