அம்பாங் ஜெயா, மார்ச் 10- மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று உலு கிளாங் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் கலந்து கொள்ள பொது மக்கள் முன்கூட்டியே வந்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டத்தில் பொருள்களை மலிவான விலையில் வாங்குதவற்குரிய வாய்ப்பினை தவறவிடக்கூடாது என்பதற்காக வெகு நேரம் காத்திருப்பதையும் அவர்கள் பொருட்டாக கருதவில்லை.
இந்த விற்பனையில் பொருள்களை வாங்க தாம் காலை 8.00 மணிக்கே வந்து விட்டதாக குடும்ப மாதான அரசா டார்மிந்தோ (வயது 47) கூறினார். இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் பொருள்கள் சீக்கிரமே விற்றுத் தீர்ந்து விடுவதாக அவர் சொன்னார்.
எனக்கான வரிசை எண் வரும் வரை நீண்ட வரிசையில் காத்திருப்பதை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை. காரணம் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதுதான் எனது பிரதான நோக்கம். இந்த திட்டத்தின் மூலம் எனது குடும்பச் செலவை பெருமளவு குறைக்க முடிகிறது என்றார் அவர்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் வகையில் குறைவான விலையில் பொருள்களை வழங்கும் இந்த விற்பனைக்கு தாம் காலையிலே வந்து விட்டதாக தற்காலிக ஆசிரியரான லுக்மான் நுர் ஹக்கிட் அகமது டாலி (வயது 26) கூறினார்.
இதுவரை ஐந்து முறை இத்தகைய மலிவு விற்பனைகளில் நான் கலந்து பொருள்களை வாங்கியுள்ளேன். இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு ஆரம்பித்தாலும் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக காலை முதல் வரிசையில் காத்திருப்பதில் தவறில்லை என்று அவர் குறிப்பிட்டார்.