ALAM SEKITAR & CUACAECONOMY

மாநிலத் தேர்தல்- இளம் வாக்காளர்ளை தகவலறிந்தவர்களாக ஆக்கும் முயற்சிகளை ஏ.எம்.கே. இரட்டிப்பாக்கும்

கோல சிலாங்கூர், மே 6- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு இளம் வாக்காளர்கள் விபரமறிந்தவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு இரட்டிப்பாக்கும்.

வரும் மாநிலத் தேர்தலில் சரியான முடிவினை எடுப்பதற்குரிய வாய்ப்பினை இளம் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அப்பிரிவின் தலைவர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.

மாநிலத்  தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கெஅடிலான் இளைஞர் பிரிவு தனது முயற்சிகளை இரட்டிப்பாக்கவுள்ளது. குறிப்பாக, இலக்குகள் அடையப்படுவதை உறுதி செய்வதற்காக தகவல் பிரிவினை அது செம்மைப்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.

அதிகமான இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். வரும் தேர்தலின் போது விபரமறிந்த வாக்காளர்கள் என்ற முறையில் அவர்கள் சரியான முடிவை எடுப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

இங்குள்ள புக்கிட் மெலாவத்தி சதுக்கத்தில் இன்று நடைபெற்ற புக்கிட் மெலாவத்தி லெபாரன் ஓட்டப்பந்தயப் போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இளைஞர்களை தகவலறிந்தவர்களாக ஆக்குவற்கு பயிற்சிகள் அல்லது மரபு ரீதியான இதர வழிமுறைகள் மட்டும் பயன்படாது எனக் கூறிய ஆடாம், ஜனநாயக கூறுகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடங்களும் பயன்படுத்தப்படும் என்றார்.


Pengarang :