செலாயாங், மே 21- தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதி மற்றும் செலாயாங் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நேற்றிரவு இங்குள்ள டத்தாரான் இல்மு பண்டார் பாரு செலாயாங்கில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதில் கலந்து வருகையாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
தாமான் டெம்ப்ளர் மற்றும் செலாயாங் தொகுதி மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மந்திரி புசார் உரை நிகழ்த்தியதோடு அதிர்ஷ்டக் குலுக்கில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
முன்னதாக, இந்நிகழ்வில் தாமான் டெம்ப்ளர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் மற்றும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஆகியோர் உபசரிப்பில் கலந்து கொண்டு சிறார்களுக்கு நோன்புப் பெருநாள் ரொக்க அன்பளிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 80 பேர் மின்னியல் சாதனங்கள் மற்றும் மலையேறும் சைக்கிள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருள்களை அதிர்ஷடக்குலுக்கில் வென்றனர்.