ஷா ஆலம், ஜூன் 4– கிள்ளான், ஜாலான் மேரு, கிள்ளான் சென்ட்ரல் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாது ஒருவர் பயணம் செய்த கார் சிக்கிக் கொண்டது. பதற்றமான சூழலில் சிக்கிக் கொண்ட அந்த மாது தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இன்று அதிகாலை 5.44 மணியளவில் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த போது அச்சாலை வழியாக காரில் பயணித்துக் கொண்டிருந்த 57 வயதுடைய அந்த மாது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக சிலாங்கூர்.ர மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் முகமதுல் ஏசான் முகமது ஜைன் கூறினார்.
வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த மாது சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதோடு சுமார் ஐந்து நிமிடங்களில் அவரின் கார் நீரில் மூழ்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அந்த மாது பொது மக்களின் உதவியுடன் காரிலிருந்து மீட்கப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவத்தில் அம்மாதுவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
அருகில் உள்ள கால்வாய் பெருக்கெடுத்த காரணத்தால் சாலையில் சுமார் 1.3 மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதாகவும் எனினும், தற்போது நீர் வடிந்து நிலைமை சீரடைந்து விட்டதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்