HEALTHMEDIA STATEMENTNATIONAL

பராமரிப்பாளரால் துன்புறுத்தப் பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தை மரணம்

ஈப்போ, ஜூலை 16- இங்குள்ள தாமான் தாவாஸ் இண்டாவில் பராமரிப்பாளரின் பாதுகாப்பில் இருந்த போது சித்திரவதை செய்யப் பட்டதாக சந்தேகிக்கப்படும்  ஆறு மாதப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த இரு தினங்களாக கோமா நிலையில் இருந்த அக்குழந்தை நேற்று முன்தினம் மாலை இங்குள்ள ராஜா பெர்மைசூரி  பைனுன் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டதாக ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.

உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட  நிலையில் அக்குழந்தையை அதன் பராமரிப்பாளர்  கடந்த புதன்கிழமை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக அவர் அறிக்கை’யில் தெரிவித்தார்.

மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அந்தக் குழந்தை கோமா நிலைக்குச் சென்றதும் துன்புறுத்தல் காரணமாக  உடல் முழுவதும் வீங்கி இருப்பது தெரிய வந்தது என அவர் குறிப்பிட்டார்.

கனமான பொருளால் தலையில் தாக்கப்பட்டதால் அக்குழந்தை மரணமடைந்தது சவப் பரிசோதனையில்  தெரியவந்துள்ளது எனவும் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 52 வயதுடைய அந்த பராமரிப்பாளர் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ்  விசாரணைக்கு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.


Pengarang :