ஷா ஆலம், ஜூலை 22 – சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) மாநிலத்தில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 330,000 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தீ, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன சமூகப் கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
எம்.பி.ஐ. அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இந்த உதவி பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக வழங்கப்படுகிறது என்று அஸ்ரி தெரிவித்தார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் வந்தால் அவர்களுக்கு உதவ எம்.பி.ஐ. தயாராக உள்ளது.
இருப்பினும், விண்ணப்பதாரருக்கு உதவி வழங்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு கோரிக்கையும் ஆராயப்படுகிறது என்று நேற்று இரவு இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் சொன்னார்.
தாமான் டெம்ப்ளர் மற்றும் மோரிப் தொகுதிகளில் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைவில் எம்.பி.ஐ. உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் என்று அஸ்ரி கூறினார்.
தாமான் டெம்ப்ளர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 59 பேருக்கு டேவான் செரோஜா கம்போங் பெண்டஹாரா பத்து கேவ்ஸில் திங்கட்கிழமை தலா 300 வெள்ளி வழங்கப்படும்.
அதே நேரத்தில் மோரிப் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 152 பேருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 500 வழங்கப்படும் என்றார் அவர்.