கோலாலம்பூர், டிச 14- சொந்த நிலத்தில் இருந்த ஆயார் தாவார் தோட்ட தமிழ் பள்ளிக்கு அந்த நிலத்தை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு உதவியதற்காக அதன் உரிமையாளரான சீன ரப்பர் வர்த்தகர் யிக் டோங் பிங் பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
பேராக் சித்தியவானைச் சேர்ந்த 78 வயதான அவர் பள்ளிக்கான நில வரியைக்கூட இதுவரை வசூலிக்காமல் சொந்தமாகச் செலுத்தி வந்துள்ளார்.
அப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை யிக் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 330,000 வெள்ளிக்கு வாங்கியுள்ளார்.
அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கர் ஒன்றுக்கு 200,000 லட்சம் வெள்ளியாகும். அப்பள்ளி அங்கேயே தொடர்ந்து இயங்குவதற்கு ஏதுவாக சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை வெறும் 400,000 வெள்ளிக்கு விற்க அவர் முன்வந்துள்ளார்.
அதற்கும் மேலாக, அப்பள்ளியின் நிதி திரட்டும் முயற்சிக்கு 50,000 வெள்ளியை நன்கொடையாகவும் வழங்கியுள்ளார். இதன் வழி அந்த நிலத்தின் விலை 350,000 வெள்ளியாக ஆனது.
இருப்பினும், பள்ளிக்கு நிலத்தைப் பெற நிதி சேகரிப்பதில் சிக்கல் இருப்பதைக் கண்டறிந்த அவர் நிலத்தின் விலையை 300,000 வெள்ளியாகக் குறைத்தார். இந்த கருணை உள்ளத்திற்காக பள்ளியின் தலைமையாசிரியர், இதர ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளையும் யிக் பெற்றுள்ளார்.
1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக பள்ளிக்கான நில வாடகையை வசூலிக்காமல் அதனை தாமாகவே செலுத்தி வந்துள்ளார். சீனப் புத்தாண்டின்போது பள்ளி நடவடிக்கைகளுக்கு யிக் நிதியுதவி செய்வார் மற்றும் மாண்டரின் ஆரஞ்சுகளையும் வழங்குவார். நான் பணக்காரன் அல்ல, என்னால் இன்னும் நில வரிக்கான கட்டணத்தை செலுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலோர் பால் மரம் வெட்டும் தொழிலாளர்களின் பிள்ளைகள். அந்த தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவை இப்போது நான் திருப்பி தருகிறேன் என யிக் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.