கோலாலம்பூர், ஏப்ரல் 12: பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக அதிக மதிப்புள்ள முதலீடுகளை பெற்றதன் வழி, நாட்டின் திறனை மலேசியர்கள் உணர்ந்து கொள்ள முடியும். அரசாங்கத்தின் திறனை உணரும் ஆற்றல் மலேசியர்களுக்கு உண்டு என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) முகநூல் பக்கத்தில் இருந்து சர்வதேச ரீதியில் செமிகொண்டக்டர் தயாரிப்பில் மலேசியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து வீடியோ அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட அவர், புதிய, உயர் தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை புதுமையாக்க மடாணி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
“உலகளாவிய நிறுவனங்களின் மதிப்புமிக்க முதலீடுகள், அதிகமான மலேசியர்களுக்கு அதிக ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குகிறது.
“நமது பொருளாதாரம் மற்றும் இந்த தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு, மேம்பாட்டுக்கும் பங்களிக்கும், மலேசியர்களின் ஆற்றலிலும் திறனிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பிரதமர் அன்வார் தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் (அமெரிக்க $1 = RM4.76) மதிப்புள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பெற்றதன் வழி, மலேசியா, குறிப்பாக பினாங்கு, ஒரு புதிய செமிகொண்டக்டர் மையமாக உருவாகி வருவதாக உலகப் பொருளாதார மன்றத்தின் வீடியோ அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.