புத்ராஜெயா, ஏப் 17 – சர்ச்சைக்குரிய பெட்டாலிங் ஜெயா டிஸ்பர்சல் (பி.ஜே.டி.) இணைப்பு நெடுஞ்சாலைத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று அறிவித்தார்.
திட்ட மேம்பாட்டாளருடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதில்லை என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்வைத்த அனைத்து முன் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் கால அவகாசம் கோரியதாகவும் எனினும் புத்ராஜெயா அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
பல முன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் விவாதங்களைத் தொடரக்கூடாது என்பது எங்கள் முடிவாகும். இதனால் இத்திட்டம் தொடராது என்றார் அவர்.
நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்குக் கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என்பது எங்கள் முடிவாகும் என்று இன்று அமைச்சரவைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது ஃபாஹ்மி கூறினார்.
இதன் தொடர்பான முழு விவரங்களை பொதுப் பணி அமைச்சு விரைவில் வெளியிடும் என்றார் அவர்.