ஷா ஆலம், ஜன.28:
வரும் பிப்ரவரி 3இல் 2019ஆம் ஆண்டுக்கான சூப்பர் லீக் காற்பந்தாட்ட போட்டிக்கு ஷா ஆலம் அரங்கம் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் பொருட்டு சிலாங்கூர் அணியினர் ஜனவரி 30 மற்றும் 31 ஆம்தேதிகளில் பரீட்சார்த்த முறையில் இந்த அரங்கத்தைப் பயன்படுத்தலாம் என்று டாரூல் ஏசான் ஃபேசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட் (டி இ எஃப் எம்) உறுதிப்படுத்தியது.
திடலை மறுசீரமைக்கும் பணி முற்றுப் பெற்றுவிட்டதாக குறிப்பிட்ட் டி இ எஃப் எம் தலைமை நிர்வாகி ரோஹைடி துகிரோ இப்பணியை முற்றுப் பெறச் செய்வதோடு இதன் தரத்தைக் கட்டிக்காப்பதிலும் தாங்கள் மிகுந்த கடப்பாடு கொண்டிருந்ததாகவும் கூறினார்.
சிலாங்கூர் – பெல்டா யுனைடட் இடையிலான முதலாவது போட்டிக்கு முன்னரே சீரமைப்புப் பணிகள் பூர்த்தியாகிவிட்டதோடு திடலும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.