கோலாலம்பூர், மே 6-
ஓய்வூதிய நிதி குழுமம் (கேடபள்யூஏபி) எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு வழங்கிய 2 பில்லியன் வெள்ளி கடனுதவிக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய உத்தரவாதக் கடிதத்தில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கையொப்பமிட்டிருந்ததாக இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2012 மார்ச் 27ஆம் தேதி அன்று அப்போதைய பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் நஜீப் அக்கடிதத்தில் கையொப்பமிட்டிருந்ததாக கேடபள்யூஏபியின் நிரந்தர வருமான துறையின் முன்னாள் உதவித் தலைவர் அமிருல் இம்ரான் அகமது தனது சாட்சி வாக்குமூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அமைச்சரவை எடுத்த முடிவிற்கேற்ப எஸ்.ஆர்.சி நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்க இணக்கம் தெரிவிப்பதாக அறிவிக்கும் அக்கடிதம் 28-03-2012 அன்று நிதியமைச்சிடம் இருந்து கேடபள்யூஏபி பெற்றதாக அமிருல் இம்ரான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், அக்கடிதத்தில், நிதியமைச்சின் ஒப்புதல் கடிதம் வழங்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, இந்த கடனுதவியை சம்பந்தப்பட்ட தரப்புக்கு வழங்க பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது என்றும் எஸ் ஆர்சி நிறுவனத்திற்கு கடனுதவியாக 42 மில்லியன் வெள்ளி வழங்கியது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நஜீப் மீதான வழக்கில் 13ஆவது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது அமிருல் கூறினார்.