ஷா ஆலம், ஜூலை 3– சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் 3 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.டி.) பலனை மூன்று வாரங்களுக்குப் பின்னரே அறிய முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னரே கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்ததை கடந்த கால அனுபவங்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.
தடுப்பூசி என்ற புதிய ஆயுதம் நம்மிடம் இருப்பதுதான் இதில் புதிய திருப்பமாகும். மாநிலத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பி.கே.பி.டி. ஆணை தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை தீவிரப்படுத்துவற்கு அரிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்றார் அவர்.
தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பொறுத்த வரை நாம் இரு அம்சங்களை கவனத்தில் கொள்கிறோம். ஒன்று தடுப்பூசி விநியோகம். மற்றொன்று தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை. இவ்விரு தேவைகளையும் ஒருமுகப்படுத்த சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவும் பி.எச். கார்ப்ரேஷன் நிறுவனமும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி கையிருப்பு மற்றும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் தடுப்பூசி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் பொதுமக்கள் வருவதை உறுதிபடுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.