ஷா ஆலம், அக் 16- சிலாங்கூர் ஃப்ரூட் வேலி இன்று தொடங்கி காய்கறிகளை குறைந்த பட்சம் இரண்டு வெள்ளி விலையில் பொதுமக்களுக்கு விற்கவுள்ளது.
சிலாங்கூர் ஃப்ரூட் வேலி தோட்டத்திலிருந்து பெறப்படும் காரணத்தால் இந்த காய்கறிகள் சந்தையில் கிடைப்பதை விட மிகவும் பசுமையாக காணப்படும் என்று அதன் சந்தை நிர்வாகி நோர் ரஷிடா முகமது ரய்ஹான் கூறினார்.
முன்பு நாங்கள் இங்கு பழ வகைகளை மட்டும் விற்று வந்தோம். இப்போது கூடுதலாக காய்கறிகளையும் ஒரு பொட்டலம் 2 வெள்ளி என்ற விலையில் விற்கவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த காய்கறி விற்பனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இங்கு வெண்டை, வெள்ளரி, மிளகாய், கத்திரிக்காய், இஞ்சி, முட்டைக்கோசு, பயிற்றங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்கப்படுகின்றன என்றார் அவர்.
பராமரிப்பு பணிகள் மற்றும் எஸ்.ஒ.பி. விதிகளை தரம் உயர்த்துவதற்காக ஒரு வார காலத்திற்கு மூடப்பட்ட இந்த விவசாய சுற்றுலா மையம் இம்மாதம் 2 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது.
இங்கு பெரியவர்களுக்கு 15 வெள்ளியும் சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 10 வெள்ளியும் நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படுகிறது. அதே சமயம் வெளிநாட்டினரைப் பொறுத்தவரை பெரியவர்களுக்கு வெ.30 ஆகவும் சிறார்களுக்கு வெ.25 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.