ஷா ஆலம், அக் 18- நாட்டில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளிகளில் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கல்வி ஸ்தாபனங்களைத் திறப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையை பின்பற்றுவதில் நாம் உறுதியாக உள்ளதோடு தடுப்பூசி அதற்கான அடிப்படையாக உள்ளதை உறுதி செய்ய விரும்புகிறோம். தடுப்பூசித் திட்டம் முழுமை பெறாவிட்டால் நோய்ப் பரவலை நம்மால் கையாள முடியாது என்றார் அவர்.
அதே சமயம், எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் முன்பு பள்ளிகளைத் திறந்த போது நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்தது என்றார்.
நேற்று. தாமான் மெலாவத்தி போலீஸ் நிலைய நிர்மாணிப்புப் பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை தடுப்பூசி பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
அந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இல்லாவிடில் இப்பிரச்சனை சமூகத்தில் தீவிரமாக பரவிவிடும் என்றார் அவர்.