|
ஷா ஆலம், டிச 7 – பாதுகாக்கப்பட்ட நிரந்தர வன் பகுதியில் பகுதியில் காணப்படும் சட்ட விரோதக் கட்டிடங்கள் அல்லது பயிர்கள் அகற்றப்படும்.
நிரந்தர வனப் பகுதியில் மாநில அதிகாரிகளின் முன் அனுமதியின்றி எந்தக் கட்டுமானங்களும் அனுமதிக்கப்படாது என்று சுற்றுலா, சுற்றுச்சூழல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பூர்வக் குடியினர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார். 1985 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வனவியல் (திருத்தம் 2018) சட்டத்தின் 32 வது பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு 100,000 வெள்ளிக்கும் மேல் போகாத அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று இன்று மாநில சட்டமன்றத்தில் அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப் பகுதியில் காணப்படும் சட்டவிரோதக் கட்டுமானப் பிரச்சனைகள் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்பகுதியை காலி செய்யக் கோரும் அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சிலாங்கூர் வனத்துறை எடுத்துள்ளது என்றார். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் அப்பகுதியை காலி செய்யத் தவறினால் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.