ஷா ஆலம், ஜன 9- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா மக்களுக்கு உதவும் வகையில் இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் இலவசமாக உடைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் என்ற பேதமின்றி அனைவருக்கும் இங்கு உடைகளை இலவசமாக வழங்கும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்நிய பிரஜையான ஜியானா ஜியாம் (வயது 32) கூறினார்.
கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டதிலிருந்து அப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளைக்காமல் உதவிகளை வழங்கி வரும் பொது மக்களின் தயாள குணத்தை தாம் பெரிதும் போற்றுவதாக கடந்த ஐந்தாண்டுளாக இங்கு தங்கியிருக்கும் ஜியானா சொன்னார்.
இதனிடையே, வெள்ளத்தில் அனைத்து உடைகளும் சேதமடைந்த நிலையில் பொருத்தமான உடைகளைத் தேடி தாம் இங்கு வந்ததாக பாதுகாவலரான ஆர்.சுப்பிரமணியம் கூறினார்.
இந்த உதவி எங்களின் சுமையைக் குறைப்பதில் பெரும் துணை புரிகிறது. உடைகளை வாங்குவதற்கு செலவிடும் பணத்தில் வேறு அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியும் என்று அவர் சொன்னார்.
இந்த இலவச ஆடை விநியோகச் சந்தை நேற்று இன்றும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது.