ஷா ஆலம், டிச 24- அடுத்தாண்டில் மாநகர் அந்தஸ்தைப் பெறும் இலக்கை அடைவதற்காக காஜாங் நகராண்மைக் கழகம் தனது சேவைத் திறனை அதிகரிக்க உள்ளதோடு சம்பந்தப்பட்ட துறைகளுடன் அணுக்கமான ஒத்துழைப்பையும் நல்க உள்ளது.
“மீண்டும் அடிப்படை கொள்கைக்கு மாறும்“ கோட்பாட்டிற்கேற்ப மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மலைச்சாரல்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் அடங்கும் என்று நகராண்மைக் கழக தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
மேம்பாட்டுப் பணிகளை திட்டமிடும் போது நிலக் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக மலைச்சாரல் களை வலுப்படும் விஷயத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
குப்பைகளை அகற்றுவது, சுத்தத்தைப் பேணுதல், சாலைகள், கால்வாய்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பொது பூங்காக்கள் பராமரிப்பது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் திறனுடனும் விரைந்தும் செயல்பட நகராண்மைக் கழகம் உறுதி பூண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, சட்டவிரோத குப்பை கொட்டும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அத்தகைய சம்பவங்கள் நிகழும் இடங்கள் மீது தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.