NATIONAL

RM300,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகள் கைது – ஊழல் தடுப்பு ஆணையம்

கோத்தா கினபாலு, நவ. 21: இடைத்தரகர்கள் மற்றும் ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களிடமிருந்து சுமார் RM300,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகளை சபா ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.

எம்ஏசிசி ஆதாரங்களின்படி, அனைத்து சந்தேக நபர்களும் நேற்று மாலை 4 மணியளவில் இங்குள்ள சபா எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இந்தச் செயலை செய்ததாக நம்பப்படுகிறது. சோதனை மேற்கொள்ளாமல் விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அவர்கள் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஓட்டுநர்கள் சோதனைக்கு உட்படுத்தப் படாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெற ஒவ்வொரு விண்ணப்பதாரர்களிடமிருந்தும் RM400 முதல் RM1,200 வரை லஞ்சம் கேட்கும் மற்றும் பெறும் நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் கூறுகிறது.

சபா எம்ஏசிசி இயக்குநர் டத்தோ எஸ் கருணாநிதியைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்து, எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 17 (ஏ) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

– பெர்னாமா


Pengarang :