அம்பாங், ஏப் 26- இவ்வாண்டு இறுதிக்குள் “ரைட்” எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தில் சுமார் 3,000 பேரை பதிவு செய்யும் இலக்கை அடைய முடியும் என சிலாங்கூர் அரசு நம்புகிறது.
இத்திட்டத்தில் இதுவரை 500 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளதாக இளைய தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
இத்திட்டத்திற்கு கிடைத்து வரும் ஊக்குமூட்டும் வகையிலான ஆதரவின் வழி ஆண்டு இறுதிக்குள் 3,000 பேரை பதிவு செய்யும் இலக்கை அடைய தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு நாங்கள் 500 வெள்ளி வழங்குகிறோம். ஆகவே உணவு பட்டுபாடா தொழில் ஈடுட்டுள்ளவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
நேற்று இங்கு காபா ரமலான் டீம் சிலாங்கூர் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ரைட் திட்டத்தை புறநகர்ப் பகுதி இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையில் தாங்கள் தீவிரம் காட்டவுள்ளதாக பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
சபாக் பெர்ணம், தங்ஜோங் காராங் போன்ற நகரங்களில் இணையம் வாயிலாக பொருள்களை வாங்குவது குறைவாக உள்ளது. ஆகவே, அப்பகுதிகளில் இத்திட்டத்தை பிரபலப்படுத்த விரும்புகிறோம் என்றார் அவர்.