ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 21 வயது இளைஞர் உள்பட 64 பேர் மரணம்- சிலாங்கூரில் 15 இறப்புகள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 14- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 21 வயது இளைஞர் உள்பட 64 பேர் நேற்று மரணமடைந்ததாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளையில் இரத்தக் கசிவு ஆகிய பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்த அந்த ஆடவர் நெகிரி செம்பிலான், துங்கு ஜாபர் மருத்துவமனையில் காலமானதாக அவர் சொன்னார்.

இருபத்தெட்டு வயதுடைய மற்றொரு இளைஞர் கோலாலம்பூர், வேந்தர் துங்கு முகரிஸ் மருத்துவமனையில்  காலமானதாக அவர் தெரிவித்தார். எனினும், அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

நேற்று மரணமடைந்தவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதோடு நீரிழிவு, இருதய நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 15 பேர் மரணமடைந்த வேளையில் அதற்கு அடுத்து 10 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் எழு சம்பவங்களுடன் ஜொகூரும் ஆறு சம்பவங்களுடன் கெடாவும் உள்ளன.

 


Pengarang :