ஷா ஆலாம், ஏப்ரல் 3:
சிலாங்கூர் மாநில மக்கள் இன்னும் அம்னோ தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் செய்த இமாலய ஊழல்களை மறக்கவில்லை என்று சிலாங்கூர் அரசாங்க ஆதரவு கிளப்பின் (பிபிசி) தலைவரான எங் சியூ லிம் கூறினார். அம்னோ மந்திரி பெசாரான டாக்டர் முகமட் கிர் தோயோ நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்களினால் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்றார்.
” 2008-க்கு முன்பு, தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஊழல் தலைவிரித்து ஆடியது. அறிவுபூர்வமான மற்றும் சிந்தனை ஆற்றல் கொண்ட மக்கள் தற்போதைய அரசியல் நிலவரத்தை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பழைய நிர்வாகத்தில் நடந்த கோளாறுகள் மற்றும் மோசடிகளை மறக்க மாட்டார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
சுவி லிம் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ சொஹாய்மி ஷாடான் சிலாங்கூரை ஆட்சி செய்ய அம்னோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அறிக்கைக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.