கூச்சிங், ஜூலை 29-
சரவாக் மாநில 12ஆவது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு எதிர்மறையான, இனவாதம் மற்றும் குறுகிய சிந்தனை போன்றவற்றை சமாளிக்கும் ஆற்றலை மாநில பக்காத்தான் பெற்றிருப்பது அவசியம் என்று அதன் பொது தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மத்தியில் மட்டுமல்லாமல் சரவாக் மாநில அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்த பக்காத்தான் கூட்டணி எண்ணியுள்ளது. எனவே, ஓர் அணியாய் பயணிப்பதற்கு சரவாக் மாநில பக்காத்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தலைவருமான அன்வார் தெரிவித்தார்.
“நீண்ட வீடுகள்,. இனம் மற்றும் சமயங்களைக் கடந்து சிந்திக்காமல் நாம் ஒரு நாடாக நடைபோட முடியாது. நமது மனிதநேயத்தை எடுத்துக் காட்டும் நீதியான கொள்கையால் மட்டுமே நாம் வெற்றி பெற இயலும்” என்றார் அவர்.
“இனவாதம் மற்றும் சமயப் பிரிவினை வாதம் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு சரவாக்கும் ஓர் அணியாகப் பயணிக்கத் தயாராக வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.