ஷா ஆலம், ஆகஸ்ட் 25:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரியின் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் தலைமைத்துவத்தை ஆதரிக்கும் என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அமிரூடின் ஷாரி தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹீட் ஹாமீடி, டாக்டர் மகாதீர் முகமட் தற்போது தனிமையில் செயல்படுகிறார் என்றும் அவர் இதற்கு மேல் பிரதமர் பொறுப்பிற்கு தேவையற்றவர் என்ற தெரிவித்த கருத்தை மறுத்து இவ்வாறு அமிரூடின் ஷாரி பதிலடி கொடுத்தார்.
” அமாட் ஜாஹீட் தற்போது கண்ணாடி முன் பேசிக் கொண்டிருக்கிறார? தேசிய முன்னணி மற்றும் அம்னோ மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. அம்னோவுடன் இருந்த பலர் தற்போது துன் டாக்டர் மகாதீர் அவர்களுடன் இருக்கிறார்கள். சிலாங்கூரை பொருத்தவரை மத்திய அரசாங்கத்தை ஒரு போதும் உதாசினப் படுத்தாது. மேலும், தற்போது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் கீழ் இயங்கும் புத்ராஜெயா அரசாங்கத்திற்கு எங்களின் முழு ஆதரவு இருக்கும். துன் டாக்டர் மகாதீரின் தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்,” என்று அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.