ஷா ஆலம், ஜூன் 23- புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கான பதிவு இயக்கத்தின் வாயிலாக சுமார் 750 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவது உறுதி செய்யப்படும்.
இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கிய இந்த இயக்கத்தின் வாயிலாக தொகுதியிலுள்ள 15 பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு பதிவு நடவடிக்கை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா ஜூல்கிப்ளி கூறினார்.
ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 15 பேரை பதிவு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் இது சாத்தியம் என நம்புகிறோம். இந்த இயக்கம் தொடங்கிய முதல் தினத்திலேயே 70 பேரை பதிவு செய்ய முடிந்தது என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இம்முனிசெல் திட்டத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெலாவத்தி தொகுதி இந்த பதிவு இயக்கத்தை நடத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.‘
சிலாங்கூரில் 37 விழுக்காட்டு குடும்பங்கள் விவேக கைப்பேசி வசதியை கொண்டிருக்கவில்லை என்ற தேசிய புள்ளிவிபர இலாகாவின் 2019ஆம் ஆண்டிற்கான தரவுகளை கருத்தில் கொண்டு இந்த பதிவு இயக்கத்தை நடத்த தாங்கள் முடிவெடுத்ததாக அவர் மேலும் சொன்னார்.