ஷா ஆலம், ஆக 28- நாட்டில் 11 பொருளாதார துறைகள் மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் கடந்த வாரம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் பாசார் மாலாம், பாசார் பாகி மற்றும் பாசார் தானி விவசாய சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
28 பாசார் மாலாம், 6 பாசார் பாகி மற்றும் 3 பாசார் தானி சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 3,995 பேரின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இதன் மூலம் புத்துயிரூட்டப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹாய்னி கூறினார்.
வியாபாரிகள் லைசென்ஸ் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றியும் வியாபாரம் செய்வதை உறுதி செய்வதற்காக மாநகர் மன்றம் அவர்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை தயார் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
அனைத்து வியாபாரிகளும் கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிகையலங்காரம், சமையல் உபகரணங்கள், மரத் தளவாடம், மின்னியல் மற்றும் மின்சாரம், பாசார் மாலாம், பாசார் பாகி, பாசார் தானி ஜவுளி உள்பட 11 வகையான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் கடந்த 16ஆம் தேதி அனுமதி வழங்கியது.