தோல்வி கண்ட மொகிடினுக்கு மீண்டும் அரசாங்க உயர் பதவியா? கெஅடிலான் கட்சி கேள்வி
ஷா ஆலம், செப் 5- அமைச்சருக்கான அந்தஸ்துடன் கூடிய தேசிய மீட்சி மன்றத் தலைவர் பதவிக்கு டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நியமிக்கப்பட்டது குறித்து கெஅடிலான் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமரான அவர் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை முறையாக நிர்வகிக்கத் தவறி விட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தப் போவதாக கூறி நாட்டில் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தினாலும் அவசரகாலத்தின் முடிவில் அந்த பெருந்தொற்று இன்னும் மோசமான கட்டத்தை எட்டியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மொகிடின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலே அரசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால், அதிருப்தியடைந்த அரண்மனைத் தரப்பு மொகிடின் நாடாளுமன்றத்தை குழப்புவதாக குற்றஞ்சாட்டும் சூழ்நிலை உண்டானதோடு அவர் தனது பிரதமர் பதவியையும் இழக்கவும் நேரிட்டது என்று நசாத்தியோன் குறிப்பிட்டார்.
அமைச்சருக்குரிய அந்தஸ்துடன் கூடிய தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு டான்ஸ்ரீ மொகிடின் யாசினை அமைச்சரவை கடந்த புதன் கிழமை நியமித்ததாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி நேற்று தெரிவித்திருந்தார்.