அம்பாங், செப் 23- மக்கள் நலத் திட்டங்களுக்கு இவ்வாண்டில் 3 கோடி வெள்ளியை எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சில பெரிய திட்டங்களை மேற்கொள்வதற்காக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 2 கோடி வெள்ளி வரை செலவிடப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
சிலாங்கூர் இணைய தரவு சேவைத் திட்டம், சிலாகூர் டியூஷன் ராக்யாட் திட்டம், தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல கட்டணக் கழிவுத் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இறுதியில் “மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்“, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய நிகழ்வுகளுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.
இதுவரை நாம் செலவிட்ட தொகை உணவுக் கூடைகளையும் பொதுமக்களையும் மற்றும் மையமாக கொண்டிருக்கவில்லை. மாறாக சுற்றுசூழல், வளர்ப்பு பிராணிகள் மற்றும் சமய நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்தது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில மிருகவதை தடுப்பு சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிரமத்தில் உள்ள விளையாட்டாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் எம்.பி.ஐ. ஏற்கனவே உதவிகளை வழங்கியுள்ளது.
இது தவிர, கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில், கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்குவதற்கு எட்டு லட்சம் வெள்ளியை அது செலவிட்டுள்ளது.