ஷா ஆலம், செப் 23- நாட்டிலுள்ள பெரியவர்களில் 81 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 89 லட்சத்து 64 ஆயிரத்து 474 பேர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். “கோவிட்நாவ்“ எனும் அகப்பக்கம் வாயிலாக சுகாதார அமைச்சு இத்தகவலை பகிர்ந்து கொண்டுள்ளது.
நேற்று வரை 93.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 551 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
நேற்று நாடு முழுவதும் 321,342 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 30,860 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 197,994 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர். இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 487 பேர் மரணமடைந்தனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 334 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24,565 ஆக உயர்ந்துள்ளது.