பாடாங் பெசார், அக் 15- இங்குள்ள புக்கிட் கெத்தாரி, குவா செமாடோங் குகையில் கண்டு பிடிக்கப்பட்ட பண்டைய கால ஓவியங்கள் மற்றும் மனிதர்களின் மண்டை ஓடுகளை மீட்கும் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தும் பணியை தேசிய பாரம்பரியத் துறை மேற்கொள்ளவுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் மாநில திட்டமிடல் பிரிவு மற்றும் பெர்லிஸ் மாநில மலையேறிகள் சங்கத்தினரின் துணையுடன் தேசிய பாரம்பரியத் துறை கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிப் பணியின் போது இந்த பண்டைய கால பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தேசிய பாரம்பரியத் துறையின் ஆணையர் முகமது அஸ்மி முகமது யூசுப் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் ஆகக்கடைசி அகழ்வாராய்ச்சி தரவுகளை ஆவணப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வில் தவறவிட்ட புதிய தடங்களை அடையாளம் காணவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
மனித மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்ட குவா செமாடோங் குகைக்கு சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்மைசா அகமதுவுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட இந்து பௌத்த பண்டைய காலப் படிவங்கள் ஐந்தாம் நு ற்றாண்டு முதல் கி.பி. 10 க்கு உட்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என கருதப்படுவதாக அவர் கூறினார்.
பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள குகைகளில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது புக்கிட் கெத்தாரியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் 5,000 முதல் 10,000 ஆண்டுகள் பழைவை வாய்ந்தவை என மதிப்பிடப்படுகிறது என்றார் அவர்.