ECONOMYMEDIA STATEMENTPBT

தீபாவளியை முன்னிட்டு 80 பேருக்கு வெ. 20,000 நிதியுதவி: பெ.ஜெயா மாநகர் மன்றம் வழங்கியது

ஷா ஆலம், அக்- 28-  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய சமூகத்தைச் சேர்ந்த 80 பேருக்கு  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் 20,000 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியது.

மாநகர் சமூக மேம்பாட்டுத் திட்டத்தில் பதிந்து கொண்ட தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு கூறியது.

இத்திட்டத்தின் கீழ் அந்த 80 பேருக்கும் தலா 250 வெள்ளி வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையைக் குறைப்பதை  இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.

பொது மக்களுக்கும் மாநகர் மன்றத்திற்கும் இடையே அணுக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :