கிள்ளான், நவ, 2- தீபாவளியை முன்னிட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வசதி குறைந்தவர்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி ஏறக்குறை முற்றுப்பெற்றுள்ளது.
தலா 100 வெள்ளி மதிப்பிலான 400 முதல் 600 பற்றுச் சீட்டுகள் ஒவ்வொரு தொகுதிக்கும் வழங்கப்பட்டதாக மந்திர புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வசதி குறைந்தவர்களை இலக்காக கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறிய அவர், இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒவ்வோராண்டும் தீபாவளி, நோன்பு பெருநாள் மற்றும் சீனப்புத்தாண்டின் போது வசதி குறைந்தவர்கள் பயன்பெறுவதை பெறுவதை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.
இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏறக்குறைய முற்றுப்பெற்று விட்டது. செந்தோசா தொகுதியில் மிக அதிகமாக அதாவது 600 பேருக்கு இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி வர்த்தகத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த பற்றுச் சீட்டுகளுக்கு பதிலாக ரொக்கத் தொகையை வழங்குவது தொடர்பான பரிந்துரை இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் மாநில வரவு செலவுத் திட்டத்தின் போது பரிசீலிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.