கிள்ளான், நவ 3- இங்குள்ள ஜாலான் தெங்கு கிளானா, லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஏற்பாடுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பார்வையிட்டார். இந்தியர்களின் பிரசித்தி பெற்ற வர்த்தக மையமான இப்பகுதிக்கு தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்தியானா முகமதுவுடன் வந்த டத்தோஸ்ரீ அமிருடின், சுமார் ஒரு மணி நேரத்தை மணி நேரத்தை செலவிட்டு அங்குள்ள கடைகளை பார்வையிட்டார். அஜுந்தா டெக்ஸ்டைல், லிட்டில் இந்தியா ஜூவல்லரி, முத்து பிள்ளை எண்டர்பிரைஸ், பாலிவுட் ஃபேஷன் ஜூவல்லரி, கவிதா காதணி கலெக்சன் மற்றும் அர்ச்சனா கறி ஹவுஸ் ஆகிய வரத்தக மையங்களுக்கு அவர்கள் வருகை புரிந்தனர். லிட்டில் இந்தியா பகுதி மீண்டும் உயிர்ப் பெற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிவது கண்டு மகிழ்ச்சிடைகிறேன் என்று அமிருடின் சொன்னார். கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக முடங்கிக் கிடந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது குறித்து வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாமிய சமய விவகாரங்கள், பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் பண்டமாரான் உறுப்பினர் டோனி லியோங் டக் சீ ஆகியோர் மந்திரி புசாருடன் வருகை புரிந்தனர்.