ஷா ஆலம், டிச 8- கோம்பாக், பத்து கேவ்ஸ் திடலில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட அடிப்படை கால்பந்து பயிற்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். டீம் சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் எஃப்.ஏ. கால்பந்து குழுவின் ஏற்பாட்டில் முதன் முறையாக இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
அடுத்த தலைமுறை விளையாட்டாளர்களை சிலாங்கூர் எஃப்.சி. குழு கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் 10 முதல் 17 வயது வரையிலான இளையோர் கலந்து கொண்டதாக டீம் சிலாங்கூர் செயலகம் கூறியது.
அடுத்த தலைமுறை விளையாட்டாளர்களைத் தயார் படுத்த விரும்பும் வட்டாரக் கால்பந்து குழுக்கள் மற்றும் சமூக கிளப்புகள் ஆற்றல்மிக்க இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காண இந்த திட்டம் துணை புரியும் என்று அது வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
சிலாங்கூர் சமூகத்திற்கு ஆக்கமும் அதிகாரமும் அளிப்பதற்கான திட்டங்களைத் தொடர்வதற்கு தாங்கள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்பை நல்கவுள்ளோம். அந்த சிவப்பு ஜாம்பவான் குழுவின் ஒளிமயமிக்க பொற்காலம் மீண்டும் திரும்பும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் டீம் சிலாங்கூர் நம்பிக்கைத் தெரிவித்தது.