கோலாலம்பூர், ஏப் 11– மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.2664 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் (சி.ஏ.ஏ.எம்.) கட்டாய நிகழ்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக மலேசியன் ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் இன்று தெரிவித்தது.
கடந்த 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாவாவ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கே.எல்.ஐ.ஏ.) அவசரமாகத் திரும்பியது.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிபந்தனையின் ஒரு பகுதியாக சி.ஏ.ஏ.எம்.மின் நடவடிக்கைக்காக 2016 ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறையின் 165வது விதியின்படி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த விமானம் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
. அச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கும் சம்பவத்தின் போது விமானிகள் எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் கடந்த வாரம் முழுவதும் தாங்கள் சி.ஏ.ஏ.எம் முடன் ஒத்துழைத்ததாக .அது மேலும் தெரிவித்தது.
இவ்விவகாரம் பொதுமக்களிடமிருந்து மூடி மறைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மலேசியன் ஏர்லைன்ஸ் கடுமையாக மறுக்கிறது. மாறாக, எல்லா நேரங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் நிலையான நடைமுறைகளை அது தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சமயத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனுபவித்த அச்சம் மற்றும் அசௌகரியத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ் வருந்துவதோடு மன்னிப்பும் கோருகிறது என்று அது கூறியது.