கோலாலம்பூர், ஏப் 23 – நாட்டில் நேற்று 6,342 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 99.34 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
எஞ்சிய 42 சம்பவங்கள் அல்லது 0.66 சதவீதம் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியவர்களில் 13 பேர் தடுப்பூசியை அறவே செலுத்தாதவர்கள் அல்லது முழுமையாக முழுமையாகச் செலுத்தாதவர்களாவர்.
மேலும் 14 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை. எஞ்சிய 15 பேர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட் -19 பீடித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 21 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரண்டு புதிய நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதன் வழி தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று 9,111 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன்வழி நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 558 ஆக உள்ளது.