ஷா ஆலம், மே 12- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில சீரமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் அப்பணிகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீடு பழுதுபார்ப்பு உள்ளிட்ட இதர உதவிகள் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அப்பணிகளில் சிலவற்றை சிலாங்கூர் ஸக்கத் வாரியம் ஒருங்கிணைப்பதோடு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சும் உதவி நல்கி வருவதால் இதன் அமலாக்கம் சற்று தாமதமாகும் என்று அவர் தெரிவித்தார்.
உலு லங்காட்- நெகிரி செம்பிலான் எல்லையிலுள்ள கெந்திங் பெரடைஸ் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் சீரமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. காரணம் அப்பகுதியில் அதிக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.
இதர இடங்களில் குறிப்பாக சாலைகள் மற்றும் ஆறுகளை சீரமைக்கும் பணி 40 முதல் 50 விழுக்காடு வரை பூர்த்தியடைந்துள்ளது என்று இங்குள்ள யுனிசெல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு டிசம்பர் 17 முதல் 19 வரை பெய்த அடை மழை காரணமாக சிலாங்கூரின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் அடிப்படை வசதிகளை சீரமைப்பதற்காகவும் மாநில அரசு 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.