புத்ராஜெயா, மே 12 – நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தாதியர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு மக்களுக்குச் சிறந்த சுகாதாரச் சேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
சர்வதேசத் தாதியர்கள் தினம் 2022 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மருத்துவமனைகளில் தாதியர் பற்றாக்குறை குறித்துப் பல புகார்கள் வருவதை ஒப்புக்கொண்டார்.
அவரது கூற்றுப்படி, கோலாலம்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையான துங்கு அசிசா மருத்துவமனையில் (HTA), போதுமான தாதியர்கள் இல்லாததால் அதன் சேவைகளை அதிகரிக்க முடியவில்லை என்றும், எனவே, HTA க்கு அதிகமான தாதியர்களை அனுப்பும் ஒப்புதலை விரைவு படுத்தியுள்ளதாகவும், மேலும் இந்த நிலையை எதிர்நோக்கும் மற்ற மருத்துவமனைகளின் தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் கூறினார்.
இதற்கிடையில், ஒப்பந்தம் மற்றும் பதவிகள் தொடர்பான தாதியர்களின் பிரச்சினையையும் தீர்க்க முயற்சிப்பதாகக் கைரி கூறினார்.
“தற்போது, ஒப்பந்த அந்தஸ்து கொண்ட சுமார் 3,469 தாதியர்கள் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு உதவ நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் மற்றும் தாதியர்கள் தொடர்ந்து சிறந்த சேவைகளை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.