கிள்ளான், செப் 15- மாநில அரசின் ஏற்பாட்டில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் மலிவு விற்பனைத் திட்டத்தை செமெந்தா சட்டமன்ற தொகுதி மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் என்ற இத்திட்டம் உள்ளிட்ட மக்கள் பரிவு விற்பனை தங்களுக்கு பேருதவியாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இத்தொகுதியில் எட்டு இடங்களில் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகமது சாடோன் முவா கூறினார்.
செலவினை மிச்சப்படுத்தக் கூடிய இந்த திட்டத்திற்கு பொது மக்கள் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தை அவர்கள் பெரிதும் வரவேற்பதோடு கோழி, அரிசி, முட்டை, எண்ணெய் போன்ற பொருள்களும் விரைவாக விற்றுத் தீர்ந்து விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், கட்டண முகப்பிடங்களை அதிகரிப்பதன் மூலமாகவும் உலர்ந்த மற்றும் ஈரப்பதம் கொண்ட உணவுப் பொருள்களுக்கு தனித் தனி முகப்பிடங்களை அமைப்பதன் வாயிலாகவும் பயனீட்டாளர்கள் விரைவாக பொருள்களை வாங்குவதை உறுதி செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.
இம்மாதம் முழுவதும் செமெந்தா தொகுதியின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் பங்கேற்று பயனடையுமாறு தொகுதி மக்களை முகமது சாடோன் கேட்டுக் கொண்டார்.
இன்று தாமான் செம்பாகாசாரியிலும் வரும் 21 ஆம் தேதி புக்கிட் கெராயோங்கிலும் 28 ஆம் தேதி கம்போங் பத்து 12 பகுதியிலும் இந்த மலிவு விற்பனை நடைபெறும் என்றார் அவர்.