ECONOMYSELANGORSUKANKINI

ஆசிய கிண்ண பி20 போட்டி- ஹரிமாவ் மூடா-மங்கோலியா 1-1 கோல் கணக்கில் சமநிலை

கோலாலம்பூர், செப் 15- உலான்பத்தார் எம்.எப்.எப். அரங்கில் நேற்று நடைபெற்ற 20 வயதுக்கும் கீழ்ப்பட்டோருக்கான ஆசிய கிண்ண கால்பந்து போட்டியின் இ பிரிவு தேர்வாட்டத்தில் உபசரணை நாடான மங்கோலியாவும் 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய ஹரிமாவ் மலாயா குழுவும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

தொடக்க கோலை புகுத்துவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டியதால் இவ்வாட்டம் தொடக்கம் முதல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

எனினும், ஹரிமாவ் மலாயா தற்காப்பு ஆட்டக் கார ர் புரிந்த தவறு காரணமாக ஆட்டத்தின் 24 வது நிமிடத்தில் மங்கோலியா குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கன்பாட் என்ற மங்கோலிய ஆட்டக்காரர் தனது அணியின் முதல் வெற்றி கோலை புகுத்தினார்.

எனினும், இரண்டாம் பாதி ஆட்டத்தை சுறுசுறுப்புடன் தொடங்கிய மலேசிய அணி ஒன்பதாவது நிமிடத்தில் அலிப் இஸ்வான் யுஸ்லான் மூலம் கோலை புகுத்தி கோல் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தியது.

இந்த தொடரில் அடுத்தக் கட்டமாக இலங்கை அணியை வரும் வெள்ளிக் கிழமையும் தென் கொரியாவை ஞாயிற்றுக்கிழமையும் ஹரிமாவ் மலாயா அணி சந்திக்கவுள்ளது.


Pengarang :