செமினி, செப் 24- சிலாங்கூரில் 2 கோடியே 60 லட்சம் மரங்களை நடும் இயக்கம் வெற்றியடைவதற்கு அரசு துறைகளும் நிறுவனங்களும் ஆக்ககரமான பங்கினை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கு எட்டப்பட வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப இந்நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 26 ஆண்டுகளாக சுல்தான் ஆட்சி புரிந்து வருவதன் அடையாளமாக 2 கோடியே 60 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரசார இயக்கத்தின் வாயிலாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 545,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை முழுமை பெறச் செய்வதற்கு இன்றைய இந்த நிகழ்வு ஒரு தொடக்கப் புள்ளியாக விளங்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
வாருங்கள், நாம் நேசிக்கும் இந்த சிலாங்கூர் மாநிலத்தை பசுமையாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில நிலையிலான அனைத்துலக வன தினத்தை முன்னிட்டு இங்குள்ள புக்கிட் புரோகாவில் மரம் நடும் இயக்கத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக காடுகளைப் பாதுகாப்பதில் மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று அமிருடின் தமதுரையில் குறிப்பிட்டார்.