ஷா ஆலம், நவ 22- மாநிலத்தில் கடந்தாண்டு சேஹாட் மனநல
தொலைபேசி சேவையை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டோர் அங்கீகாரம்
பெற்ற நிபுணர்களிடம் ஆலோசக சேவையைப் பெற்றுள்ளனர்.
இந்த சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்புகளில் பெரும்பாலானவை
வேலையிட சிக்கல், குடும்ப விவகாரம், சுற்றுச் சூழல் பிரச்சனைகளை
உள்ளடக்கியிருந்ததாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இதுவரை 300க்கும் மேற்பட்ட அழைப்புகளை சேஹாட் ஆலோசக சேவை
மையம் பெற்றுள்ளது. எனினும், இதன் தொடர்பான துல்லியமான
தரவுகளை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரின்
போது வெளியிடுவேன் என்றார் அவர்.
மன அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் சேஹாட் தொலைபேசி
சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகையோருக்கு முடிந்த அளவு உதவி செய்ய நாங்கள் தயாராக
இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த சேஹாட் சேவையை செலங்கா செயலி வாயிலாகப் பெறலாம்.
மனநல சோதனை, இடர் மதிப்பீடு, மனோவியல் கல்வி காணொளி
உள்ளிட் சேவைகள் இந்த செயலியில் வழங்கப்படுகின்றன.
பொது மக்கள் எதிர்நோக்கும் மனோ ரீதியான பிரச்சனைகளை கேட்டறிந்து
அதற்கான தீர்வு வழங்கக்கூடிய வகையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களுடன்
இந்த சேவை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.