ECONOMY

ஷா ஆமில் உள்ள ஜாக்கெல் ஜவுளியகத்தில் தீவிபத்து- 80 விழுக்காடு சேதம்

ஷா ஆலம், ஜன 1- இங்குள்ள செக்சன் 7  இல் அமைந்துள்ள ஜாக்கெல் ஜவுளி விற்பனை மையத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 80 விழுக்காட்டுப் பகுதி அழிந்தது.

அந்த மூன்று மாடி ஜவுளியகத்தின் இரண்டாம் லோட் பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீஸ் கூறினார்.

இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிருடற்சேதமோ ஏற்படவில்லை என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த தீவிபத்து தொடர்பில் காலை 7.08 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஷா ஆலம், கோத்தா அங்கிரிக், சுபாங், கோத்தா ராஜா, டாமன்சாரா, சுங்கை பினாங் மற்றும் பூச்சோங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் ஒரு லோட் பகுதி தீயில் 80 விழுக்காடு அழிந்துள்ளதைக் கண்டனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்றார் அவர்.

ஜவுளிகளில் தொடர்ந்து கனன்று கொண்டிருக்கும் தீயை முழுமையாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :