சிப்பாங், ஏப் 29- இம்மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட புயல்காற்றில் வீடுகள் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த உதவி நிதி உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் ஆதரவைப் புலப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஒரு முறை மட்டும் வழங்கப்படும் வகையில் இந்த உதவித் தொகை அமைந்துள்ளது பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகளைச் சரி செய்வது உள்ளிட்ட உதவிகள் நோன்புப் பெருநாளுக்கு முன்பாகவே செய்து தரப்பட்டன என்றார் அவர்.
இந்த நிதியுதவி வழங்கப்படுவதன் அடையாளமாக இந்த நிகழ்வில் 36 பேருக்கு உதவித் தொகையை ஒப்படைக்கிறோம். எஞ்சியவர்கள் மாவட்ட அலுவலகம் மற்றும் சேவை மையங்களில் உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த இயற்கைப் பேரிடரில் அங்காடிக் கடைகளும். கடைகளும் பாதிக்கப்பட்டதை அறிகிறோம். பாதிக்கப்பட்ட 60 பேரை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகம் அடையாளம் கண்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
அந்த புயல்காற்றில் பாதிக்கப்பட்ட வீடுகளில் கூரைகளைச் சரி செய்வதற்கும் மாற்றுவதற்கும் சிப்பாங் நகராண்மைக் கழகம் 160,000 வெள்ளியைச் செலவிட்டதாக அமிருடின் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் தேதி வீசிய பலத்த புயல்காற்றில் சிப்பாங்கிலுள்ள கம்போங் புலாவ் மெராந்தி, தாமான் புத்ரா பெர்டானா மற்றும் அங்சானா அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.